
“தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் எதுவுமில்லை.”
*****
“வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.”
*****
“ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
“நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா…” என்று கேட்டுக் கொண்டான்.
அதற்கு ஞானி, “நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்”.
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, “ஐயோ என்னை விட்டுவிடு… விட்டுவிடு…” என்று கத்திக் கொண்டிருந்தார்.
உடனே குடிகாரன், “நீங்கள் தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்” என்றான்.
உடனே ஞானி சிரித்துக் கொண்டே, “நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு” என்றார்….!!!”
*****
“மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.
மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த
களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.
அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல
தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.
மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.
“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது
அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்
என நினைத்துக்கொண்டே சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.
இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த
ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால்
இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி
விட்டு சென்றார்.
‘நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே’ “
*****